குஜராத் தேர்தலில் தனது சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாக்களிக்கின்றனர்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமாக குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
மாநிலத்தின் முக்கியமான ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று காலை ஆமதாபாத்தில் உள்ள ராணிப்பில் உள்ள நிஷான் பள்ளியில் வாக்களிக்கிறார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவரது தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அப்போது தனது தாயார் ஹீராபெனின் பாதங்களை பிரதமர் மோடி தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார்.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள அங்கூரில் இன்று காலை வாக்களிக்கிறார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் ஆமதாபாத்தில் உள்ள ஷிலாஜ் தொடக்கப்பள்ளியில் இன்று காலை வாக்களிக்கிறார்.
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா ஆகிய பல விஐபி பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்களது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று வாக்களிக்கின்றனர்.








