குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத் தேர்தல் குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய…

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத் தேர்தல்

குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.

மும்முனை போட்டி

இந்த தேர்தல் மூலம் கால் நூற்றாண்டாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. மும்முரம் காட்டி வருகிறது. அதேபோல் குஜராத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

முதல் கட்ட தேர்தல்

முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. பா.ஜ.க.வும், காங்கிரசும் 89 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

பிரசாரம் ஓய்ந்தது

பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, கட்சித்தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரசுக்காக அக்கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களும், ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களும் பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

வாக்குப்பதிவு

இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,311 நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 கிராமப்புறங்களிலும் உள்ளன. 89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இடைவெளியின்றி 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை எந்திரங்கள், அழியாத மை உள்ளிட்ட சாதனங்களும், பொருட்களும் சென்றடைந்து விட்டன. 89 தொகுதிகளிலும் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏதுவாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.