வரும் 17-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14!

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் பிப்.17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள்…

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் பிப்.17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.  விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது.

இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.  புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதை கருத்தில் கொண்டு, வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.   இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் பிப்.17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது.

இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக வழங்கும்.  வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இன்சாட் 3டிஎஸ் அனுப்பப்படுகிறது.

https://twitter.com/isro/status/1755565356276756895

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.