தூங்கிய குழந்தையைக் கவ்விய சிறுத்தை.. அதிரடியாய் மீட்ட வாவ் தம்பதி!

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை, சிறுத்தை ஒன்று கவ்வியது. அதன் வாயில் இருந்து குழந்தையை மீட்ட தம்பதியின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ளது குனோ வனவிலங்கு…

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை, சிறுத்தை ஒன்று கவ்வியது. அதன் வாயில் இருந்து குழந்தையை மீட்ட தம்பதியின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ளது குனோ வனவிலங்கு சரணாலயம் (Kuno Wildlife Sanctuary). இங்குள்ள விலங்குகள், அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு அடிக்கடி விசிட் அடித்து, ஆடு, மாடுகளை அடித்து உணவாக்கிக் கொள்வது வழக்கம்.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது துரா (Dhura) கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சிங் குஜ்ஜார் (55), அவர் மனைவி பசந்தி பாய் (50) ஆகி யோர் தங்களுடைய 2 வது பேரக்குழந்தை பாபியுடன் வீட்டுக்கு வெளியே வியாழக் கிழமை தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென கேட்ட அலறல் சத்தத்தால் எழுந்த ஜெய்சிங்கிற்கு அதிர்ச்சி.

அருகில் நின்ற சிறுத்தை ஒன்று பாபியின் காலை, வாயில் வைத்தபடி முறைத்துப் பார்த்தது. அடுத்த நொடியே, ஓங்கி சிறுத்தையின் வாயில் மிதித்தார் ஜெய்சிங். அவர் மனைவியும் எழுந்து அலறினார். இருவரும் சேர்ந்து சிறுத்தையும் கண், மூக்கு பகுதியில் தொடர்ந்து தாக்கினர். சிறுத்தையின் வாயில் இருந்து குழந்தையை, பசந்தி பாய் இழுத்துக் கொண்டிருந் தார்.

அதற்குள் அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர். குழந்தையின் காலை விட்ட சிறுத்தை, ஜெய்சிங் மீது பாய முயன்றது. அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சிறுத்தையை, கம்பால் தாக்கியதை அடுத்து அங்கிருந்து தப்பியது.

சிறுத்தை தாக்கியதில் குழந்தை, ஜெய்சிங் மற்றும் அவர் மனைவிக்கு கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அந்த தம்பதியின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.