சட்ட விரோதமாக காவிரியில் நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகம் இழைக்கும் அநீதிக்கு இணையான இந்த செயல் உழவர்களை கடுமையாக பாதிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி ஆற்றிலிருந்து பாசனக் கால்வாய்கள் மூலமாக விவசாய நிலங்களுக்கு நேரடியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. சில இடங்களில் காவிரி நீர் ஏரி, குளங்களில் நிரப்பப்பட்டு, அவற்றின் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வசதிகள் இல்லாத இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் மோட்டார்களைக் கொண்டு நீர் எடுக்கப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. இவை தான் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நியாயமான பாசன முறைகள் ஆகும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தலைமடை பாசன மாவட்டங்களில் புதிய பாசன கலாச்சாரம் பரவி வருகிறது. அந்த மாவட்டங்களில், பாசன வசதி ஏற்படுத்தப்படாத பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள சிலர் ஒன்று சேர்ந்து ‘வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கம்’ என்ற பெயரில் சங்கத்தை உருவாக்கி, அதில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். அந்த சங்கத்தின் மூலம் காவிரி ஆற்றிலிருந்து இராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, செயற்கையாக உருவாக்கப்பட்ட அணை போன்ற கட்டமைப்பில் நிரப்பப்படுகிறது. அங்கிருந்து சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒவ்வொருவரின் நிலத்திற்கும் 2.5 அங்குலம் விட்டம் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இத்தகைய தண்ணீர் இணைப்பைப் பெறுவதற்காக தொடக்க நிலை உறுப்பினர் கட்டணமாக ரூ.20 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
இது தவிர தண்ணீர் இறைப்பதற்கான நடைமுறைச் செலவுகள் விவசாயிகளிடமிருந்து தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து பராமரிப்பதை விட இது வசதியாக இருப்பதாலும், ஆயிரக்கணக்கான அடிகள் ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்தாலும் கூட தண்ணீர் கிடைக்காத பகுதிகளின் விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக இருப்பதாலும், இந்த நீரேற்று பாசன திட்டத்திற்கு உழவர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், இது சட்டவிரோதமான, இயற்கைக்கு எதிரான, நீர்ப்பாசன விதிகளை மீறிய செயலாகும். இந்த முறை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.
பாசன வசதி இல்லாத நிலங்களுக்கு, பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது மிகவும் அவசியம்; அதை செய்து தர வேண்டியது அரசின் கடமை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், பொதுச் சொத்தான காவிரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் அதிகாரமும், கடமையும் தமிழ்நாட்டில் தமிழக அரசுக்கு மட்டும் தான் உள்ளது. அதற்கு பதிலாக வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கம் என்பன போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் விருப்பம் போல காவிரி நீரை எடுப்பது நியாயம் அல்ல. தலைமடை பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இவ்வாறு தண்ணீரை எடுத்தால் காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீரே கிடைக்காத நிலை உருவாகி விடும்.
மேட்டூர் உபரி நீர் திட்டத்தையும், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்துதல், தோனிமடுவு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்ற முடியும். எனவே, இந்தத் திட்டங்களை செயல்படுத்தவும், அதே நேரத்தில் தலைமடை பாசன மாவட்டங்களில் காவிரியிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் இறைக்கப்படுவதைத் தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.