நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில்,மத்தியப் பிரதேசத்தில் மின் தடையால் மணமகன்கள் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் லால். இவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ரமேஷ் ஆசைப்பட்டார். இந்நிலையில், அவரின் ஆசைப்படி வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்களைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமண சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. திருமணத்தின்போது மணப்பெண்கள் இருவரும் முக்காடு போட்டிருந்ததோடு, ஒரே மாதிரியான ஆடைகளும் அணிந்திருந்தனர். இதனால், திருமண சடங்குகள் நடைபெறும் போது இருட்டில் மணப்பெண்கள் இருவரும் மாறிவிட்டனர்.
அக்னியைச் சுற்றி வரும்போது பண்டிதரும் இதனை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றி சுற்றி வரும்படி செய்துவிட்டார். திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்ற பிறகுதான் தாங்கள் போட்டிருந்த முக்காடை அகற்றினர். இதையடுத்து, மணமகன் எப்படி மணப்பெண் மாறியது என்று கேட்டு பெண் வீட்டாருடன் சண்டையில் ஈடுபட்டார்.
இது குறித்து திருமணத்தை நடத்திவைத்த புரோகிதரிடம் கூறியபோது, மீண்டும் ஒரு முறை சடங்கை நடத்திவிடலாம் என்று கூறி மீண்டும் திருமண சடங்கை நடத்தி வைத்தார். மின்தடையால் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.