அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைத்தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக 45 வயதுக்கு மேற்பட்ட அரசு அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை கண்காணித்து உறுதிப்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு அனைத்துத்துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.







