சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவாரூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான…

சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது. ஆளுநர்
தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை பரப்பலாம். ஆனால் ஆளுநராக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது கடுமையான கண்டனத்துக்குரியது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டின் வரலாறு தெரியாமலும் ஆளுநர் பேசுவது கண்டனத்துக்குரியது.

அதைப்போலவே கன்னியாகுமரியில் நடைபெற்ற தேரோட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்ட பொழுது அவர்களை தேர் இழுக்க விடாமல் செய்வது பாஜகவின் சதி செயல். சட்டமன்ற உறுப்பினர் காந்தி தலைமையில் இவ்வாறு நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது.நமது நாட்டில் எல்லா மதத்தினரும் எல்லாவிதமான கோவில்களுக்கும் செல்வது இயல்பு.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி வேலை செய்கிறது. இதை தமிழக
மக்கள் கண்டிப்பாக நன்றாக உணர வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற
அடிப்படையில் தமிழக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாஜக சதி வேலை
செய்கிறது.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களை அழைத்துப் பேசி சுமுக தீர்வு காண வேண்டும்.
அதைப்போலவே பள்ளிகள் நாளை திறக்கப்பட கூடிய சூழ்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் முதலானவற்றை சரிசெய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜி செய்யும் செயல் பாஜகவிற்கு உதவுவதாக அமைகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அழைத்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயலும் சமயத்தில் இவ்வாறு மம்தா பானர்ஜி செய்வது பாஜகவுக்கு உதவுவது போல் அமைகிறது.

57 பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பல இடங்களில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

மேலும் பாரதிய ஜனதா கட்சி மோடி என்ற ஒற்றை உருவத்தை வைத்து தான் அரசியல் செய்கிறது. பல தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. ஆகவே
பாஜகவில் கடுமையான புகைச்சல் ஏற்பட்டு உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத்
தேர்தலில் பாஜகவின் உட்கட்சி புகைச்சல் வெளியில் வரும். மத்திய அரசின்
திட்டமான விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வங்கி கணக்கில் சிறு குறு விவசாயிகளுக்கு
வரவு வைக்கப்படும் திட்டத்தில் 145 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜகவின்
பங்கு அதிகம். அவர்கள் விவசாயிகள் அல்லாதவர்களை தாங்கள் பணம் கொடுப்பதாக கூறி கட்சியில் சேர்த்து தில்லுமுல்லு செய்துள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசு
உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரலாற்றில் முதல்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டது
மகிழ்ச்சியாக இருந்தாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. பல இடங்களில்
தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. ஆகவே அரசு உரிய கவனம் எடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை கொடுத்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் நிதானமாக நடவடிக்கை எடுத்து வருகிறது அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாங்கள் பாராட்டுகிறோம். அதே சமயத்தில் ஒரு தனிச் சட்டம் உருவாக்கி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றி செயல்பட வைக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.