ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துடன் கூடிய குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும் அமைச்சர்கள் பொன்முடி, ஏவா வேலு, ஐ பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
திமுகவின் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆளுநரின் தேநீர் விருந்தை ஏற்கனவே புறக்கணித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகை சார்பாக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேநீர் விருந்து உபசரிக்கப்படும். அந்த வகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி ஆளுநர் மாளிகை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறந்த துறை சார்ந்த ஊர்திகளுக்கு விருதுகளை ஆளுநர் வழங்குகிறார் .
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் எம்.பி, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், பாடகி பி சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
– யாழன்







