மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்…

தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், கருத்து கேட்காமலும், உயர்கல்வி துறை அமைச்சரான எனக்கும் தெரிவிக்காமல், கௌரவ விருந்தினர் என அழைக்கிறார்கள்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என்றாலே, வேந்தர், அவருக்கு அடுத்தபடியாக இணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர் இருப்பார். ஆனால் மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து துணைவேந்தரை கேட்டால், தனக்கு எதுவும் தெரியாது எனவும் எல்லாம் ஆளுநர் மாளிகையில் இருந்து தான் சொல்கிறார்கள் என தெரிவிக்கிறார்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இடையே, ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் வருகிறது. எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது. வேந்தருக்கு பிறகு இணைவேந்தர் தான் இருக்க வேண்டும்.

ஆனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் கௌரவ விருந்தினர் என மத்திய இணை அமைச்சர் பெயர் போடப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு துறை செயலாளர் மூலமாகவும் துணைவேந்தரிடமும் நேரிலேயே தெரிவித்து விட்டோம். ஆனால் எங்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. எந்த இசம் இருந்தாலும், மனித இசம் இருக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.