செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அரசியல் நாடகம் செய்வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
“ஆவின் பால் கொள்முதலை லிட்டர் 27 லட்சத்திலிருந்து 31 லட்சமாக உயர்த்தி உள்ளோம். ஆவின் கொள்முதலை முழுமையாக உயர்த்த ஆக்கப் பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆவின் பெயரை பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தனியார் விற்பனையாளர்கள் பொருட்களை விற்பனை செய்வது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மணிப்பூர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில் மத்திய அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை ஏன் ஏற்கவில்லைமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அரசியல் நாடகம் செய்கிறார்.நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலையில் திசை திருப்பும் நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகிறார்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்






