அரசு புனர்வாழ்வு மருத்துமனையின் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை கே.கே.நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.28 கோடி மதிப்பில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக திறக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள், இலவச சக்கர நாற்காலிகள், அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார். அப்போது ஒருவர் முதலமைச்சரின் காலை தொட்டு வாழ்த்து பெற்றார். அவரிடம், காலில் விழக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரே ஆண்டில் ரூ.277 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் துறைக்கு இந்த ஆண்டு 3 மடங்கு கூடுதலாக ரூ.1,808 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







