32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

“சமூகம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சமூக வளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும் எனவும், அது அவ்வளவு சீக்கரம் ஏற்பட்டுவிடாது அதற்கான விழிப்புணர்வை திமுக அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக,  கடலூர்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர்,  விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில்,  வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வுக் கூடம் மற்றும் திருப்பூர் ஈரோடு மதுரை தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 6 ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடங்கள் என மொத்தம் ரூ.32.95 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.  ரூ.138 கோடி மதிப்பீட்டில் கல்லூரிகளுக்கான நவீன விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதேபோல்,  தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட இருளர் பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூபாய் 78 கோடி மதிப்பிலான 943 புதிய வீடுகளை முதலமைச்சர் வழங்கினார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 244 பயனாளிகளுக்கு, 79.35 கோடி ரூபாய் திட்ட மதிப்பிற்கான 53.94 கோடி ரூபாய் வங்கி கடனுடன் கூடிய 25 கோடி ரூபாய் மானியம் வழங்கி தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி திட்டம் மற்றும் 776 பயனாளிகளுக்கு ரூபாய் 62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சமூக நீதி – சமத்துவம் மானுட நெறிகளின்படி சமதர்மம் – சகோதரத்துவம் – ஆகிய தமிழ்நாட்டை உருவாக்கத்தான் என்னை நான் ஒப்படைத்து உழைத்துக் கொண்டு வருகிறேன்.  எல்லார்க்கும் எல்லாம் என்பதை நிர்வாக நெறியாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.  அந்த அடிப்படையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள், சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்த்தி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

இந்தத் திட்டங்களை சிறப்புக் கவனம் எடுத்து அக்கறையோடு தீட்டி செயல்படுத்தி வருகின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நான் மனதார பாராட்டுகிறேன்.  அமைதியாக அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து கொண்டு வருகிறவர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

சமூக நிலைகளில் உயர்த்துகின்ற அனைத்து முயற்சிகளையும் நம்முடைய அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.  இதன் தன்னம்பிக்கை சுயமரியாதை – அதிகாரத்தில் பங்கு போன்ற நிலைகளில் ஆதிதிராவிட பட்டியலின மக்களை உயர்த்துகின்ற பணிகளை அரசு செய்துகொண்டு வருகிறது.  இப்படி தொடர்ச்சியான பணிகள் மூலமாகதான் சுயமரியாதைச் சமதர்ம சமுதாயத்தை நாம் உருவாக்கியாக வேண்டும்.  நிதி ஒதுக்கீடுகளால் தொலைநோக்குப் பார்வையால் கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிடலாம்.  ஆனால், சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் மக்கள் மனங்களில் உருவாகவேண்டும். மக்களுடைய மனதளவில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

இது அவ்வளவு சீக்கிரமாக ஏற்படாது என்பதும் உண்மைதான்.  அதே நேரத்தில் சமூக வளர்ச்சி சிந்தனை வளர்ச்சியை உருவாக்குகின்ற நம்முடைய விழிப்புணர்வு பயணம் என்பது,  தொய்வில்லாமல் தொடரவேண்டும்.  அந்தப் பணிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்துகொண்டு வருகிறது.

அண்ணல் அம்பேத்கரின் கனவான சுதந்திரம்,  சமத்துவம்,  சகோதரத்துவம் ஆகிய பண்புகள் நிறைந்த சமூகநீதியின் அடிப்படையிலான ஒரு சமத்துவ சமுதாயமாக தமிழ்நாட்டை உருமாற்றும் வகையில் நம்முடைய விழிப்புணர்வுப் பயணத்தை தொய்வின்றித் தொடருவோம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading