அரசு பேருந்து மற்றும் பால் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

சிவகங்கையில் அரசு பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனம் சென்றுள்ளது. அப்போது அரசு பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பால் வாகனத்தில் பயணித்த ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் பால் வாகன ஓட்டுநர் ரூபன், அரசு பேருந்து ஓட்டுனர் நாகராஜ், நடத்துனர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை மூன்று மணி அளவில் நடந்த இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.