நகைக்கடன் தள்ளுபடியில் பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும், தற்போது பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திமுக தலைவர் மேடைக்கு மேடையும், தேர்தல் வாக்குறுதியிலும் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர் எனக்கூறிய அவர், இதுபோன்ற பகுப்பாய்வினை மக்கள் மேற்கொண்டால் பகுப்பாய்வு செய்யும் உரிமையை திமுக இழக்கும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, திமுகவின் செயலை பார்க்கும்போது இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இரட்டைவேடத்திற்கு மற்றுமோர் சாட்சி நகைக்கடன் வாக்குறுதியும், தற்போதைய அறிவிப்பும்!
வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் திமுகவிற்கு கடும் கண்டனங்கள்!
பக்தனை போலவே பகல்வேஷம் கட்டி பாமரமக்களை வலையினில் மாட்டி இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே? pic.twitter.com/uuHO2Hzb6y
— O Panneerselvam (@OfficeOfOPS) December 30, 2021
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்துக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டுறவுத் துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைக் கடன்களில் 14.5 லட்சம் நகைக் கடன்கள் மட்டுமே ஏற்புடையது எனத் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், வெற்றி பெற்ற பிறகு அதனைக் கிடப்பில் போடுவதும்தான் இன்றைய ஆட்சியாளர்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
நம்பி வாக்களித்த மக்களை, ஆளும் தி.மு.க அரசு ஏமாற்றாமல் 5 சவரன் வரை அடமானம் வைத்த நகை கடன்கள், அனைத்தும் தள்ளுபடி செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். pic.twitter.com/IjvfGENc0m
— Vijayakant (@iVijayakant) December 30, 2021
நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. நம்பி வாக்களித்த மக்களை ஆளும் திமுக அரசு ஏமாற்றாமல் 5 சவரன் வரை அடமானம் வைத்த நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.