முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்க தமிழ்நாடு அரசாணையை வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ், இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த நினைவிடத்தின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டது.
உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், முகப்பில் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.








