உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தி.நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாறிய அவருக்கு, இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதிராஜா விரைவில் நலம்பெற வேண்டுமென திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாரதிராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், “உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்த அவர், விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்றார்.
மேலும், “மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்” எனவும் தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.







