இளைஞர்களை தம் வசப்படுத்துவதற்காக போதை பொருள் கும்பல் சென்னை மற்றும் கோவையில் கஞ்சா கேக் மற்றும் போதை கருகலைப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தி அமோக விற்பனை செய்து வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த கல்லூரி மாணக்கர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெகநாதன் தெருவில் சிலர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா கேக் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது அங்குள்ள உணவகம் ஒன்றின் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கெண்டிருந்த இளைஞர்கள் சிலர் பணம் கொடுத்து மர்ம பொருட்களை ஒன்றினை வாங்கி செல்வதை அவர்கள் கவனித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடனே சுதாரித்த போலீசார் அதிரடியாக இளைஞர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கேக், கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்பு இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 28 வயதான விஜயரோசன் டாக்கா மற்றும் அண்ணாநகர் 5வது அவென்யூ பகுதியை சேர்ந்த 27 வயதான தாமஸ் ஆகியோரிடம் இருந்து கஞ்சா கேக், போதை ஸ்டாம்புகளை இளைஞர்கள் வாங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து விஜயரோசன் டாக்கா மற்றும் தாமஸ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரனை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. இதில் விஜயரோசன் டாக்கா, நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய்யை கடத்தி வந்து அதில் சில மூலப்பொருட்களை சேர்ந்து கஞ்சா கேக்காக தயாரித்து தனது உணவகத்திற்கு வரும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக விற்பனை செய்ய முடியாததால், கஞ்சாவை கேக்காக தயாரித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கேக் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நூதன முறையில் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் விஜயரோசன் டாக்கா, போலீசாரிடம் வெகு நாட்களாக சிக்காமால் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதே போல் டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில், அவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போதை ஸ்டாம்புகனை 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசாரிடம் சிக்காமல் இருவரும் தங்களது நிரந்தர வாடிக்கையாளர்களை ஒன்று இணைத்து தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் கஞ்சா கேக் மற்றும் போதை ஸ்டாம்பு விற்பனை செய்து பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து போலீசார் கஞ்சா கேக் மற்றும் போதை ஸ்டாம்பு விற்பனை செய்து வந்த டாட்டூ கலைஞர் தாமஸ் மற்றும் அவரது நண்பர் விஜயரோசன் டாக்கா உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா, வாட்ஸ்அப் குழு அமைக்க பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் கஞ்சா கேக் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இதே போல் கோவையில் போதைக்காக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ரத்தினபுரி டாடாபாத் 9வது விதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்த சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற இளைஞர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிப்பட்ட 4 பேரையும் போலீசார் சோதனை நடத்திய போது போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரத்தினபுரி பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் விவேக் பாரதி, 16 வயது சிறுவன், கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தனபாலன், போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 49 வயதான மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில், சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன், கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை, வலி நிவாரண மாத்திரை, நரம்பு நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் போதை மாத்திரைகள் தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து கரிகாலன் வழங்கி வந்துள்ளார். போதை மாத்திரைகளை வாங்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலும், வகுப்பறையிலும் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களை அவர்களிடம் இருந்து காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.