ராகிங்கைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த UGC உத்தரவிட்டுள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள சூழலில், நாடு முழுவதும் உள்ள
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும்,
ராகிங் இல்லா உயர்கல்வி நிறுவனம் என்ற சூழலை ஏற்படுத்தவும் UGC
உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள சூழலில்,ராகிங்குக்கு எதிரான
விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும், விடுதிகள், உணவகங்கள்,
கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட
வேண்டும் என்றும் அந்த இடங்களை திடீர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும்
யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று ஒவ்வொரு மாணவரும்,
மாணவரின் பெற்றோரும் http://www.antiragging.in இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை
உறுதி செய்திட வேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








