சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சிலைகள் 3 அடிக்கு மிகாமல் பொதுமக்கள் வீட்டினுள்ளேயே வழிபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ அரசு தடை விதித்துள்ளது. மேலும், அரசு வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில், மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








