”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சோனியாக காந்தி வலியுறுத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுகவின் மகளிர் அணி சார்பாக நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தந்துள்ளார். இதில், பங்கேற்பதற்காக நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தடைந்தனர்.
அவர்கள் இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்.பி.கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், சோனியா காந்தியை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல், தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி , முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் , மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாவது..
“ காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியின் செல்வாக்கு குறித்தும், தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் வாக்கு வங்கி குறித்தும் எடுத்துரைத்தோம்.
குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆதரித்து பேசினார். காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலுப்படுத்த வேண்டும், நம் தோழமை கட்சியோடு எவ்வாறு நட்பு பாராட்ட வேண்டும் , அவர்களையும் சேர்த்து எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து எல்லாம் பேசினார். “ என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.







