பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை மூலம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி 106.34 கோடி பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 106.34 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், பெண்கள் சமூகத்தோடு ஒன்றிணைவதை எளிதாக்கும் நோக்கத்துடனும், பொருளாதார சமநிலையை அடையும் நோக்கத்துடனும், அனைத்து பெண் பயணிகளுக்கும் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்காக தமிழகம் முழுவதும் 7,321 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் பெண்கள் தங்கள் பணியிடத்தை சுலபமாக அடைவதற்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை எளிதில் பெறவும் முடிகிறது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி 106.34 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் 61.78 சதவீதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









