முன்னாள் காதலி வீட்டில் தகராறு; விசாரித்த சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர்

சென்னை கே.கே நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் உதவி ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெயந்த் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள அவரது…

சென்னை கே.கே நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் உதவி ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெயந்த் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள அவரது முன்னாள் காதலி வீட்டிற்கு சென்று நேற்று இரவு 8 மணி அளவில் தகராறில் ஈடுபட்டார். அதனை கண்ட அந்தப் பெண்ணின் தந்தை ஜெயந்தை பிடித்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். இதுதொடர்பாக விசாரிப்பதற்காக உதவி ஆய்வாளர் செந்தில் அந்த இளைஞரை அழைத்து பேசியுள்ளார்.

ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காத ஜெயந்த் உதவி காவல் ஆய்வாளரை மரியாதைக்குறைவாக பேசியுள்ளார். இதில் கோபமடைந்த உதவி ஆய்வாளர் செந்தில் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் செல்ல முயன்றபோது உதவி ஆய்வாளர் செந்திலை அவர் கடுமையாக தாக்கினார். இதில் முகத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் செந்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த காவல் உயரதிகாரிகள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஜெயந்த் மனநிலை பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து நேற்று அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதவி ஆய்வாளரை தாக்கிய அந்த ஜெயந்த் மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.