முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.
முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நிலை குறைபாடு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான ஷரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார்.
நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை துவக்கினார். வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
ஷரத்யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “சரத் யாதவின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் அமைச்சர் என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Pained by the passing away of Shri Sharad Yadav Ji. In his long years in public life, he distinguished himself as MP and Minister. He was greatly inspired by Dr. Lohia’s ideals. I will always cherish our interactions. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 12, 2023
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சராகவும், பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாட்டிற்கு சேவை செய்த யாதவ், சமத்துவ அரசியலை வலுப்படுத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஷரத் யாதவ் சோசலிசத்தின் தலைவராக இருந்ததோடு, அடக்கமான குணமும் கொண்டவர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.







