முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஜவகர்லால் நேரு. அவரது பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் அவரை நேரு மாமா என்று செல்லமாக அழைத்து வந்தனர். இதனால் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நவம்பர் 14ம் நாளான இன்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள சாந்தி வனம் என்ற அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரசார் இன்று சென்றனர். அவர்கள் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் ஜவர்லால்நேரு. அவரது வளர்ச்சிகர எண்ணங்கள், சவாலான சூழலிலும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. ஜனநாயகத்தின் சாம்பியன். உண்மையான தேசப்பற்றாளருக்கு எனது பணிவான அஞ்சலி என அவர் தெரிவித்துள்ளார்.







