செக் மோசடி வழக்கில் முன்னாள் உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில், சினிமா பைனான்சியர் போத்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்.பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோரிடம் 35 லட்ச ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புத்தூரில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உதயம் இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக வாங்கியதாக கூறப்படுகிறது.
கொடுத்த பணத்தை போத்ரா திருப்பிக் கேட்ட போதும் கொடுக்காததால், அவர்கள் முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட செக்கை வங்கியில் செலுத்தும் போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இது தொடர்பாக கிழமை நீதிமன்றத்தில் பைனான்சியர் போத்ரா தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் எம்.பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்களை கைது செய்ய உயர்நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி இரா. அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானதால், உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்து சிறையில் அடைக்க கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால், சினிமா பைனான்சியர் போத்ரா தரப்பில் போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்பாக்கம் துணை ஆணையர் கைது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.








