கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தின் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் வீட்டில் கணக்கில் வராத ரூ. 8.12 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வரும் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். விருபாக்ஷப்பா கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடக சோப் அண்ட் டிடெர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிறுவனத்துக்கு உற்பத்திக்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இதற்காக அவரின் மகன் பிரஷாந்த் லஞ்சம் வாங்கிய போது அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பா, அவரது மகனும் கர்நாடக ஆட்சிப்பணி அதிகாரியுமான பிரசாந்த் மாடால் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்த லோக் ஆயுக்த போலீசார், பிரசாந்த் மாடால் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்தனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பாவையும் கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமான காங்கிரஸ் தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர்.