ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததற்காக கடந்த 4 மாதங்களில் 364 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த மாதங்களாக படிக்கட்டில் பயணம் செய்யும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் சென்னை கோட்டத்திற்குட்ட ரயில் நிலையங்களில் 364 வழக்குகளும், 1.4 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 890 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் ஆபத்தை உணராமல், தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றனர். படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
RPF பணியாளர்கள் முக்கிய இரயில் நிலையங்கள் மற்றும் பிரச்சினை அதிகமாக உள்ள இரயில் நிலையங்களில் மட்டுமே பணியமர்த்தபடுகின்றனர். படிக்கட்டில் பயணம் செய்யும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை தடுக்க கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கூறுகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை-திருவள்ளூர் வழித்தடத்தில் அதிவேகமாக சென்ற புறநகர் ரயிலின் மீது ஏறிய 19 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்பு படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் மின்கம்பத்தில் அடிபட்டு விழுந்த சம்பவம் போன்று பல விபத்துக்களை அறிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆபத்தான முறையில் சகாசங்களை அரங்கேற்றி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதை தடுக்க டிவிஷனல் இரயில் பயணர்கள் ஆலோசனை குழுவின் (DRVCC) முன்னாள் உறுப்பினர் கூறுகையில், RPF அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று படிக்கட்டில் பயணம் செய்வதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோவாக மாணவர்களுக்கு காட்டவேண்டும். இறந்த மாணவர்களின் குடும்பங்களை கண்டுபிடித்து விபத்துக்கள் குடும்பங்களை எப்படி பாதிக்கின்றன என்பதை மாணவர்களுக்கு விவரிக்க வேண்டும். அபாயங்களை உணர செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், படிகட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து RPF விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இரயில் நிலையங்களில் பணியாளர்கள் நியமித்து வருவதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
அ. மாரித்தங்கம்- மாணவ ஊடகவியலாளர்.