நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் இந்த கோர சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் வெள்ள பாதிப்பில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள நிலையில், அதில் 20 பேர் மட்டுமே தங்களை தொடர்பு கொண்டுள்ளதாக கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா சுற்றுலா ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும் நேபாள் அரசுக்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகப் (Search and Rescue Operations) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காகத் தற்போது இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 105 இந்தியர்கள் உள்பட 291 வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளனர். இதற்கிடையே, ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சம்பவத்தை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசி, வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், நாம் நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்போம். நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




