வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயாக நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மறு உழவுப்பணிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போன்றவற்றை நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மருத்துவ முகாம்கள் நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மழையால் சேதமடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்றும், மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.







