கோவையில் கடந்த இரு தினங்களாக தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால்
அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் அதிவிரைவுப் படையினர் துப்பாக்கி ஏந்தி காந்திபுரம் மற்றும் கரும்புக் கடை பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினர்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகம் தொடங்கி, ஒப்பணக்கார வீதி, நூறடி
சாலை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு
வீசப்பட்டது. மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணி
பொறுப்பாளரின் கார் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்த காவல்துறை கூடுதல் டிஜிபி
தாமரைக்கண்ணன் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் கோவை மற்றும்
திருப்பூர், ஈரோட்டில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
கேட்டறிந்தார். இதை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
தாமரைக்கண்ணன், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகர துணை ஆணையர்கள்,
நுண்ணறிவு பிரவு ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்
இதனிடையே, கோவையில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் காந்திபுரம் மற்றும்
கரும்புக்கடை பகுதிகளில் அதிவிரைவு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு
மேற்கொண்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர்
காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் வஜ்ரா வாகனத்துடன் காந்திபுரம்
திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக
ராம்நகர்,வடகோவை,நூறடி சாலையை கடந்து மீண்டும் காந்திபுரம் வந்தடைந்தனர்.
கடந்த இரு தினங்களாக நிலவும் அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தைரியமூட்ட அதிவிரைவு படையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
இதனிடையே, கோவை மாநகரில் யாரேனும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது
செய்யபடுவார்கள் என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

கோவையில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு
சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளதோடு காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு
கண்காணித்து வருகின்றனர். மேலும் கோவை மாநகர் முழுவதும் போலீசார்
வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு மாநகருக்கும் வரும் நபர்களை கண்காணித்து
வருகின்றனர்.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “கோவை மாநகரில் அமைதியை நிலைநாட்ட, சோதனை சாவடிகள் அமைக்கபட்டு கண்காணித்து வருகிறோம். சோதனை சாவடிகள் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். நகரில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டு வருகிறது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய நபர்களை கைது
செய்யவும், தடுப்பு நடவடிக்கைகளுக்காவும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு
ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.







