நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!

விசைப்படகுகள் மீன்பிடி தடைக் காலம் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக் காலம் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும்.

ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் அடுத்த 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். இதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்தப்படுகின்றன.

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக நிறுத்தப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர். அதே நேரத்தில் நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.