ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. அவரது மனைவி சந்திரா. இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று (செவ்வாய் கிழமை) காலை சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் மாலை வரை வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரின் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் இரவு வரை தேடியும் சந்திரா குறித்து தகவல் எதுவும் கிடைக்காததால் சந்திராவின் கணவர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வடகாடு பகுதிக்கு சென்ற நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ் மாயமான சந்திராவை தேடி செல்லும் போது வடகாடு காட்டு பகுதியில் சந்திரா உயிரிழந்த நிலையில் அரைநிர்வாணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர்.
மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த ஆறு வடமாநில இளைஞர்கள் மீதும் ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.
இது குறித்து விசாரணைக்கு சென்ற போலீசார் அளித்த தகவலின் பெயரில் நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது அந்த பகுதியில் ஊர் மக்கள் திரண்டு சந்திராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதித்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கிராம மக்களால் அடித்து அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வடமாநில இளைஞர்களை மீட்ட போலீசார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்தனர்.
இறால் பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூன்று வட மாநில இளைஞர்கள் கஞ்சா போதையில் சந்திராவை வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் சந்திராவின் கழுத்தை சேலையால் நெரித்து கொலை செய்து அடையாளம் காண கூடாது என்பதற்காக முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் சந்திராவை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆறு இளைஞர்களில் யார் அந்த மூன்று பேர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. மேலும் வட மாநில இளைஞர்கள் பொதுமக்கள் தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் போலீசாரால் இளைஞர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த முடியவில்லை.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ராமேஸ்வரம் நகர் காவல் துறையினர் 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்து மருத்துவ சிகிச்சைக்கு பின் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும், தங்கள் கோரிக்கை குறித்து பாதிக்கப்பட்டவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆயிரக்கணக்கானோர் தொடர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் எங்கும் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.
இந்நிலையில் உயிரிழந்த மீனவ பெண்ணின் மகள் நித்தியா தாய் இறந்த இடத்திற்கே நானும் செல்கிறேன் என்று மண்ணெண்ணெனையை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை, போலீசார் தடுத்து நிறுத்தி மயங்கி விழுந்தவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
கடலில் பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை பட்ட பகலில் வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் ராமேஸ்வரம் தீவு பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










