மதுரையில் பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

மதுரை விளாங்குடி அருகே உள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் விளாங்குடி அருகேயுள்ள காமாட்சி நகர் பகுதியில் பாண்டி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோன் ஒன்று உள்ளது. இதில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறுசிறு வியாபாரிகளிடம் பெறப்பட்ட பழைய பேப்பர், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை அடுக்கிவைத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு அனுப்பி வைப்பதற்கு தயாராக இருந்தன. இந்நிலையில்  திடீரென இன்று காலை குடோனில் நெருப்பு  பற்றி கரும்புகை வெளியேறியுள்ளது. சிறிது நேரத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பேப்பர்களில் அடுத்தடுத்து தீ பரவி குடோன் முழுவதும் எரிய தொடங்கியது.   இதனால் அப்பகுதி முழுவதிலும் கரும்புகை வானுயற அளவிற்கு சூழ்ந்தது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் குடோனில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்திற்கு மேலான மதிப்பில் உள்ள பழைய  பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து கூடல் புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக தீ விபத்தானது  பட்டாசு வெடித்த போது பட்டாசு தீப்பொறி குடோனில் விழுந்து ஏற்பட்டதா..? அல்லது  மின்கசிவால் ஏற்பட்டதா என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் தீபாவளி நாளில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டு வானுயற அளவிற்கு கரும்புகை எழும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.