நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.
15 மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
நாட்டில் கொரோனாவால் சரிவை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்தும் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை எளிமையாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து வரிப் பகிர்வின் அடிப்படையில் வரும் 22-ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய தவணைத் தொகையான 47,541 கோடி ரூபாயுடன் மேலும் ஒரு தவணை சேர்த்து வழங்கப்படும் எனக் கூறினார். அதன்படி, மாநிலங்களுக்கு 95,082 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.








