பொதுமக்களுக்கு ‘பொது நிதி மேலாண்மை’ குறித்து விளக்குவதற்காக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு என்ற கோட்பாட்டின்படி ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் முக்கியமான பயன்களை அடைந்துள்ளோம். முடங்கியுள்ள பணங்களை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும், அதிகாரமில்லாத நீதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்படாத நிதிகளை திரும்பபெற்று வருகிறோம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பயிர்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறான கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணப் பயன்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சியில் செலவினங்களுக்கான “சிஸ்டம்” சரி இல்லை. கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தும் “சிஸ்டம்” சரியான முறையில் இல்லை. கடந்த ஆட்சியில், 110 விதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி சரியான முறையில் ஒதுக்கப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆட்சியில் முதியோர் உதவித் திட்டத்தில் இறந்தவர்களின் பெயர்களின் மூலம் நிதி உதவி பெற்றதும் கண்டறியப்பட்டுள்ளது என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.







