கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்திருப்பதால், திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ உள்பட சில படங்கள் ஓடிடியில் வெளியானது.
பின்னர், கடந்த நவம்பர் மாதம் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் கவலையடைந்தனர். இந்த கவலையை ஜனவரியில் ரிலீஸ் ஆன, விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் போக்கியது. அந்த படம் நல்ல வசூலை பெற்ற நிலையில் அதற்கடுத்து வெளியான படங்கள், வசூலைப் பெறவில்லை. அதையடுத்து சமீபத்தில் வெளியான ’கர்ணன்’ படம் மட்டுமே வசூலைப் பெற்று வந்தது.
இந்நிலையில் கொரோனா 2 வது அலை காரணமாக, தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளியீட்டுக்கு தயாராக இருந்த பல படங்களை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’, ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டாக்டர்’, நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’, த்ரிஷா நடித்திருக்கும் ’ராங்கி’, விஜய் சேதுபதி நடித்துள்ள ’துக்ளக் தர்பார்’, ’லாபம்’ உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் சில படங்களை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.







