ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து இராயப்பேட்டை போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற போது இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்திலிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்துக் கடந்த 23-ஆம் தேதி இபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக எம்.பியுமான சி.வி.சண்முகம் இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரைப் பதிவு செய்த இராயப்பேட்டை போலீசார், (CSR) புகார் பெறப்பட்டதாக ரசீது வழங்கினர். இந்நிலையில், சி.வி.சண்முகம் அளித்த புகார் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறிய பங்கேற்பாளர்களின் பட்டியலைப் பார்க்க முடியும்!’
ஏற்கனவே இராயப்பேட்டை போலீசார் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனோடு இந்த வழக்கைச் சேர்க்கலாமா? அல்லது வேறு வழக்குப் பதிவு செய்யலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக இராயப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.








