தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து அரசு பேருந்தகளில் 2.43 லட்சம், கார், ஆம்னி பேருந்து, ரயில்களில் சுமார் 6 லட்சம் பயணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது .
தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தளர்வுகள் எதுவும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைமையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு நகரின் விற்பனை நிலையங்கள் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள் வாங்க கடைதெருவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பண்டிகையையொட்டி வார இறுதிநாட்களும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
ரயில்கள், ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், விமானங்கள் என சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதால் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் விமானகட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கார்களிலும், ரயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் குழுவாக சேர்ந்து ‘கால் டாக்சி’களை வாடகைக்கு எடுத்துக்கொண்டும் சொந்த ஊருக்கு செல்வதை பார்க்க முடிகிறது. மோட்டார் சைக்கிள்களிலும் இளைஞர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசல் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு வசதியாக, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களை தவிர்த்து, கடந்த 21-ந்தேதி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை யிலான 3 நாட்களில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு 4 ஆயிரத்து 218 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பிற நகரங்களுக்கு இடையே அந்த 3 நாட்களில் 6 ஆயிரத்து 370 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
தீபாவளியையொட்டி, நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதவிர ரயில்கள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்களில் என ஒட்டு மொத்தமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.