மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: பெண் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மகிதா…

மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மகிதா அன்ன கிறிஸ்டி. இவர் காவல் நிலையத்தில் இருந்த போது, காட்டாங்குளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர், தனது 17வயது மகளை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த ஜூலை 2ம் தேதி அன்று புகார் அளித்துள்ளார். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி, சிறுமியின் தாயாரிடம் நடத்திய விசாரணையில் மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள்கோவிலில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கருகலைப்பு செய்ததை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்ததாக சொல்லப்பட்ட இரண்டு மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்ற அன்ன கிறிஸ்டி சம்மந்தப்பட்ட மருத்துவர்களை மிரட்டி அவர்களிடம் ரூ.12 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியாகி தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புகாராக செல்லவே, உடனடியாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது மகிதா பணம் பெற்றது உறுதியானதால் அவரை சஸ்பெண்ட் செய்தும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் பணத்தை கொடுத்து ஏமாந்த மருத்துவர்கள் மகிதா அன்ன கிறிஸ்டி மீது புகார் அளிக்கவே, அவர் மீது அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில், வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை பொன்னேரி அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை மறைமலைநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு மருத்துவர் அனுமதி பெற்று செங்கல்பட்டு குற்றவியல் 1 நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாள் நீதுமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடவே, போலீசார் அவரை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.