நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகார்: போலீசார் வழக்குப்பதிவு!

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகரும்,பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்பியும், பிரபல திரைப்பட நடிகருமான…

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகரும்,பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக முன்னாள் எம்பியும், பிரபல திரைப்பட நடிகருமான சுரேஷ் கோபி கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும்போது அந்த பெண் நிருபரின் தோள்மீது சுரேஷ் கோபி கைவைத்துள்ளார்.

அவரது இந்த செயலால் அந்த பெண் நிருபர் உடனடியாக பின்னால் நகர்ந்து சென்றார். அப்போதும் கையை எடுக்காத சுரேஷ் கோபி மீண்டும் அந்தப் பெண்ணின் தோள் மீது கை வைக்கிறார். இந்த முறை அவரின் கையை அந்தப் பெண் நிருபர் தட்டிவிடுகிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த நடிகரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அந்தப் பெண்ணிடம் நட்புரீதியிலேயே நடந்துகொண்டேன். அந்தப் பெண் இத்தருணத்தை மோசமாக உணர்ந்தார் எனில் வருந்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து பேசிய அந்த பெண் நிருபர், “அவர் வெளியிட்ட பதிவு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்றே உள்ளது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கோழிக்கோடு நகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.