’தலைவர் 170’ படத்திற்காக 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்தி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றிக்கு சமமாக தனது அடுத்த படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் ரஜினிகாந்த்.
‘ஜெயிலர்’ படம் முழுக்க முழுக்க மாஸான கமர்ஷியல் கலவையாக வெளியான நிலையில் ‘தலைவர் 170’ அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்படத்தின் இயக்குநரான த.செ. ஞானவேலுவின் முந்தைய படைப்பான ‘ஜெய் பீம்’ சமூகத்தில் பலவித அதிர்வலைகளை உண்டு செய்தது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியல் பற்றி கூறும் விதமாக இப்படத்தை இயக்கி இருந்தார் ஞானவேல்.
https://twitter.com/LycaProductions/status/1718545711128568045
இதனையடுத்து தற்போது ரஜினி நடிப்பில் ‘தலைவர் 170’ படத்தினை இயக்கி வருகிறார். அண்மையில் இப்படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு துவங்கியது. ரெட்ரோ லுக்கில் காரில் வலம் வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடித்த காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. மும்பையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் ரஜினி-அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அறிவித்துள்ளது.








