கள்ளக் காதலர்களிடம் கைவரிசை காட்டிய போலி போலீஸ்

தனியாக இருக்கும் கள்ளகாதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி நூதன முறையில்  பணம் சம்பாதித்து நட்சத்திர ஓட்டலில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த போலி போலீஸ் சிக்கினார். சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர்- மீஞ்சூர் சர்வீஸ்…

தனியாக இருக்கும் கள்ளகாதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி நூதன முறையில்  பணம் சம்பாதித்து நட்சத்திர ஓட்டலில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த போலி போலீஸ் சிக்கினார்.

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர்- மீஞ்சூர் சர்வீஸ் சாலையில் காதல் ஜோடிகள் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது வாடிக்கை. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் ஆசாமி தனியாக இருக்கும் காதல் ஜோடிகளிடம் சென்று தான் போலீஸ் என கூறி  பணம் கேட்டு மிரட்டியுள்ளார். காதலர்கள் கையில் இருந்த 3000 ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து காரில் இரண்டு பேர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து அவர்களிடம் போலீஸ் என கூறி நீங்கள் இருவரும் காவல் நிலையம் வர வேண்டும் என மிரட்டி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி பணம் நகைகள் கொடுத்தால் வீடியோவை டெலிட் செய்துவிடுகிறேன் இல்லையென்றால் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பேன் என கூறியதும் பயந்துபோன கள்ளக்காதல் ஜோடிகள் பணம், தாலி சங்கிலி உட்பட நகைகளை  கொடுத்துள்ளனர். அவர்கள் கள்ளக்காதலர்கள் என்பதால் காவல் நிலையத்தில் புகார் தராமல் தவிர்த்துள்ளனர்.

இந்நிலையில், முடிச்சூர் சர்வீஸ் சாலையில் ஒரு நபர் போலீஸ் என கூறி பணம் நகைகளை வாங்கிச் செல்வதாக உளவுத்துறை மூலமாக தாம்பரம் கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் கமிஷனரின் உத்தரவின் பேரில் கூடுவஞ்சேரி காவல் ஆணையாளர் சிங்காரவேலன் தலைமையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்.

முதற்கட்ட விசாரணையில் முடிச்சூர் சர்வீஸ் சாலையில் கடந்த 19:04:22 அன்று காரில் இருந்த கள்ளக்காதல் ஜோடிகளிடம் ஒரு நபர் பணம் மற்றும் தாலி சங்கிலி உட்பட 11 சவரன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றதாகவும். அதேபோல் 19:05:22 அன்று வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகளின் வீடியோ எடுத்து அவர்களிடம் போலீஸ் என கூறி நகைகளை வாங்கி சென்று இருப்பதும், மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா, மகாபலிபுரம், உட்பட என ஐந்து இடங்களில் சுமார் 50 சவரன் நகைகளை போலீஸ் என கூறி அந்த நபர் பணம் நகைகளை வாங்கி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது கடந்த பத்து வருடங்களாக செயின் பறிப்பில் ஈடுபடும் அந்த நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 39) என தெரியவந்தது.

இவர் சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி சிறைக்குச் சென்று கடந்த 13:04:22 அன்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். உடனே சிவராமனை பிடிக்க தனிப்படை போலீசார் கடலுருக்கு விரைந்தனர். அங்கு அவர் இல்லாததால் சிவராமனின் தொலைபேசி எண்ணை டிரேஸ் செய்து பார்த்தபோது பாண்டிச்சேரியில் இருப்பதாக தெரியவந்தது.

பாண்டிச்சேரியில் இரண்டு நாள் தேடியும் அவர் கிடைக்காததால் மீண்டும் அவரது தொலைபேசி எண்ணை மறுபடியும் டிரேஸ் செய்து பார்த்த போது அவர் பெங்களூரில் இருப்பதாக தெரியவந்தது. அங்கு விரைந்தும் குற்றவாளி சிக்காததால் மீண்டும் சென்னைக்கே திரும்பியது தனிப்படை. பின்னர் குற்றவாளி நன்மங்கலத்தில் அவரது மாமியார் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது 2012ம் ஆண்டில் கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து சென்னை உட்பட பல இடங்களில் செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடலுருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார். சென்னை உட்பட மாமல்லபுரம், தேவனாம்பட்டினம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, என பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பில் மட்டுமே சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் செயின் பறிப்பில் வரும் நகைகளை தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள மார்வாடி கடையில் விற்று அதில் வரும் பணத்தில் பாண்டிச்சேரி மற்றும் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து மதுபோதையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக குற்றவாளி பகிரங்க வாக்குமூலம் அளித்தார்.

அதன் பின்னர் சிவராமனிடம் ஒரு பல்சர் இருசக்கர வாகனம், 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 5,70,000 ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.