போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு
சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும்.
பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும்.
அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில் கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள்
பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம் என இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.
இந்நிலையில், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புதிய சட்ட திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு ரத்து தொடர்பாக எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும் இது ஒரு முரண்பாடான சட்ட திருத்தம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுபோல பத்திரப்பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் செய்ய முடியும் என்றும் மாவட்ட பதிவாளர்களுக்கே அதிகப்படியான அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.








