பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து அமித்ஷா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பாஜக தயாராக தொடங்கிவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தேர்தல் யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநாகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி குத்து விளக்கேற்றி தேசிய செயற்குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதில் 35 மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதலமைச்சர்கள், 37 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதம் முடிய உள்ளது.
இந்த கூட்டத்தில் அவரது பதவிக்காலம், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடியும் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து அமித்ஷா அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல்களை கட்சி எதிர்கொள்கிறது. இவற்றில் ஒரு மாநிலத்தைக் கூட இழந்து விடக்கூடாது” என குறிப்பிட்டார்.