தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது.
தமிழகம், புதுவை, கேரள மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், அன்று மாலையே வெளியிடப்படுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடந்ததால், அந்தத் தேர்தல் முடிந்த பிறகுதான் கருத்துக்கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அறிவிக்கப் படவில்லை. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், கடைசிக்கட்டத் தேர்தல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின்சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் படி, திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் கணித்திருந்தன. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையில் 4 அணிகள் தனித்தனியாகக் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.