மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா? முதலமைச்சர்

மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர்…

மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மிக மிக அவசரமான நிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நூற்றாண்டு காலமாக போற்றி, பாதுகாத்து வந்த சமூகநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சாதியினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதிக் கொள்கை. பிற்படுத்தப்பட்டவராக இருப்பவருக்கான சலுகைகளை தடுக்காது என்பதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்” என்று கூறினார்.

இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என இதுவரை கூறி வந்தவர்கள் சிலர் இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “அதன் சூட்சமத்தை விளக்கமாக சொல்லத் தேவையிலை. அரசியல் லாப நோக்கம் குறித்து பேச விரும்பவில்லை. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு எந்த நோக்கமாக இருந்தாலும் சமூக நீதி, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்று குறிப்பிட்டார்

சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு சரியானதாக இருக்கும். இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளது. மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா?. ஏழைகளுக்கு எதிரானதால் 10% இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டியது நமது கடமை என்றும் முதலமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.