மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனது ஆசான் என்பதில் பெருமைப்படுவதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆகஸ்ட் 7 கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். நான் கோவையின் மருமகன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
கருணாநிதி என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7ம் தேதி அவருடைய நினைவு நாள், காலையிலேயே அவரது நினைவு நாளை ஒட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கிறேன். அவரை பற்றி பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும். வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம்.
கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறி பொருட்கள் பயன்படுத்துகின்றோம். கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே வேளையில் நமது கலாச்சாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன். பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .
கைத்தறி நெசவாளர்களுக்கான நல வாரியம் உருவாக்க வானதி இருக்கிறார், நான் இருக்கிறேன் எல்லாருமே சேர்ந்து தான் செய்ய முடியும் கண்டிப்பாக செய்வோம். ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை, ஆனால்
மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும் எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை.
இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.
மக்கள் சேவை மையம் மூலம் தேசியகைத்தறி தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







