ஈரோடு இடைத்தேர்தல்; 80பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு  தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. மொத்தமாக 121 வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 80 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிகவின் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளிட்ட  80 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் ஒபீஎஸ் தரப்பிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் உள்ளிட்ட 41 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.