தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலை, விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? என்பது குறித்து நேரடியாக களத்தில் இருந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்தும், அந்த மாவட்ட விவசாயிகள், அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன என்பது பற்றியும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததாவது: 1,39,792 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி பயிர்கள் பயிரிடப்பட்டன. இதில் 16,922 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 465 ஹெக்டேர் பரப்பளவிலான நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 10,800 ஹெக்டேர் பரப்பளவிலான உளுந்து பயிர்களும் சேதமாகியுள்ளன. இதனால் அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் போதுமானதாக இல்லை.

தமிழக அரசு நிவாரணத்தை ஏக்கருக்கு 35,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கான மொத்த செலவினங்ளையும் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்ததோடு, கடந்த 5 ஆண்டுகளாக அரசின் காப்பீடும், நிவாரணமும் கிடைக்கவிலை என்ற குற்றச்சாட்டுகளையும் கூறினர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வில் விவசாயிகள் கூறியதாவது:  4 நாட்கள் பெய்த கன மழையால் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. வாய்க்கால்களை தூர்வாராததால் மழைநீர் வெளியேறவில்லை. 2022-ஆம் ஆண்டே 856 கிராமங்களுக்கு அறிவிக்கப்பட்ட காப்பீட்டு தொகையில், இதுவரை 7 கிராம விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கஷ்டங்களை மனதில் கொண்டு அறிவிக்கப்படும் நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்கினால் நன்றாக இருக்கும். தற்போது அறிவித்திருக்கும் நிவாரணத் தொகையும் போதுமானதாக இல்லை.அதையும் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வில், திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 63,000 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் 98.25 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்தன. வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் 83 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. தற்போது பருவம் தவறி பெய்துள்ள மழையாலும் நெற்பயிர்கள் அதிக அளவில் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அரசு இதற்காக அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. எனவே பயிர் பாதிப்புக்கான நிவாரணத்தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் . நிலுவையில் உள்ள அறிவிக்கப்பட்ட நிவாரங்களையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கூறியதாவது: பருவம் தவறி பெய்த கனமழையால் 14,500 ஹெக்டேர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் 4,000 ஹெக்டேர் பரப்பளவிலான சம்பா, தாளடி பயிர்கள் சேதமடைந்தன.  இதற்காக அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. உடனடியாக நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்து நிலுவையில் உள்ள நிவாரணத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதும் அரசு முன் வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.